திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.22 கோயில் (சிதம்பரம்)
பண் - கொல்லி
செஞ்சடைக் கற்றை முற்றத்
    திறநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடைக் கண்ட னாரைக்
    காணலா நறவ நாறு
மஞ்சடைச் சோலைத் தில்லை
    மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை இருள் கிழியத்
    துளங்கெரி யாடு மாறே.
1
ஏறனார் ஏறு தம்பால்
    இளநிலா எறிக்குஞ் சென்னி
ஆறனார் ஆறு சூடி
    ஆயிழை யாளோர் பாக
நாறுபூஞ் சோலைத் தில்லை
    நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று
    நீண்டெரி யாடு மாறே.
2
சடையனார் சாந்த நீற்றர்
    தனிநிலா எறிக்குஞ் சென்னி
உடையனா ருடைத லையில்
    உண்பதும் பிச்சை யேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுட்
    கருதுசிற் றம்ப லத்தே
அடிகழ லார்க்க நின்று
    வனலெரி யாடு மாறே.
3
பையர வசைத்த அல்குற்
    பணிநிலா எறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும்
    மாலுமோர் பாக மாகிச்
செய்யெரி தில்லை தன்னுட்
    டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று
    கனலெரி யாடு மாறே.
4
ஓதினார் வேதம் வாயால்
    ஒளிநிலா எறிக்குஞ் சென்னி
பூதனார் பூதஞ் சூழப்
    புலியுரி யதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்
    நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக்
    கனலெரி யாடு மாறே.
5
ஓருடம் பிருவ ராகி
    ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப்
    பயின்றஎம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட்
    கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று
    பிறங்கெரி யாடு மாறே.
6
முதற்றனிச் சடையை மூழ்க
    முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
மதக்களிற் றுரிவை போர்த்த
    மைந்தரைக் காண லாகு
மதத்துவண் டறையுஞ் சோலை
    மல்குசிற் றம்ப லத்தே
கதத்ததோ ரரவ மாடக்
    கனலெரி யாடு மாறே.
7
மறையனார் மழுவொன் றேந்தி
    மணிநிலா எறிக்குஞ் சென்னி
இறைவனார் எம்பி ரானார்
    ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட்
    டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழ லார்க்க நின்று
    வனலெரி யாடு மாறே.
8
விருத்தனாய்ப் பால னாகி
    விரிநிலா எறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
    நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுட்
    கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ
    டனலெரி யாடு மாறே.
9
பாலனாய் விருத்த னாகிப்
    பனிநிலா எறிக்குஞ் சென்னி
காலனைக் காலாற் காய்ந்த
    கடவுளார் விடையொன் றேறி
ஞாலமாந் தில்லை தன்னுள்
    நவின்றசிற் றம்ப லத்தே
நீலஞ்சேர் கண்ட னார்தாம்
    நீண்டெரி யாடு மாறே.
10
மதியிலா அரக்க னோடி
    மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோள் நெரிய வூன்றி
    நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள்
    மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று
    வனலெரி யாடு மாறே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.23 கோயில் (சிதம்பரம்)
பண் - கொல்லி
பத்தனாய்ப் பாட மாட்டேன்
    பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன்
    என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை
    அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான்
    அடியனேன் வந்த வாறே.
1
கருத்தனாய்ப் பாட மாட்டேன்
    காம்பள தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத்
    திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட்
    டிகழ்ந்தசிற் றம்ப லத்து
நிருத்தம்நான் காண வேண்டி
    நேர்பட வந்த வாறே.
2
கேட்டிலேன் கிளைபி ரியேன்
    கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினேன் நின்றன் பாதம்
    நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு
    மல்குசிற் றம்ப லத்துக்
கூட்டமாங் குவிமு லையாள்
    கூடநீ யாடு மாறே.
3
சிந்தையைத் திகைப்பி யாதே
    செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யாய்
    யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி ஓவாத்
    தில்லைச்சிற் றம்ப லத்து
அந்தியும் பகலும் ஆட
    அடியிணை அலசுங் கொல்லோ.
4
கண்டவா திரிந்து நாளுங்
    கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக்
    கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை
    மல்குசிற் றம்ப லத்து
எண்டிசை யோரு மேத்த
    இறைவநீ யாடு மாறே.
5
பார்த்திருந் தடிய னேன்நான்
    பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே என்பன் உன்னை
    மூவரில் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
    தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான்
    கூடநான் வந்த வாறே.
6
பொய்யினைத் தவிர விட்டுப்
    புறமலா அடிமை செய்ய
ஐயநீ அருளிச் செய்யாய்
    ஆதியே ஆதி மூர்த்தி
வையகந் தன்னில் மிக்க
    மல்குசிற் றம்ப லத்துப்
பையநின் னாடல் காண்பான்
    பரமநான் வந்த வாறே.
7
மனத்தினார் திகைத்து நாளும்
    மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என்செய் கேனோ
    கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத்
    தில்லைச்சிற் றம்ப லத்து
அனைத்துநின் னிலயங் காண்பான்
    அடியனேன் வந்த வாறே.
8
நெஞ்சினைத் தூய்மை செய்து
    நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
    வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
    மல்குசிற் றம்ப லத்து
அஞ்சொலாள் காண நின்று
    அழகநீ யாடு மாறே.
9
மண்ணுண்ட மால வனும்
    மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம்
    விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க
    தில்லைச்சிற் றம்ப லத்துப்
பண்ணுண்ட பாட லோடும்
    பரமநீ யாடு மாறே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.80 கோயில் (சிதம்பரம்) - திருவிருத்தம்
பாளையு டைக்கமு கோங்கிப்பன்
    மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி
    வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப
    லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண் ளாற்பின்னைப்
    பேய்த்தொண்டர் காண்பதென்னே.
1
பொருவிடை யொன்றுடைப் புண்ணிய
    மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம
    ணாளன் உலகுக்கெல்லாந்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே.
2
தொடுத்த மலரொடு தூபமுஞ்
    சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு
    மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
    தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே.
3
வைச்ச பொருள்நமக் காகுமென்
    றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை
    யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
    உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக்
    கண்கொண்டு காண்பதென்னே.
4
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
    கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
    நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்
    கண்கொண்டு காண்பதென்னே.
5
ஊனத்தை நீக்கி உலகறிய
    என்னை யாட்கொண்டவன்
தேனொத் தெனக்கினி யான்தில்லைச்
    சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை
    யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்
    கண்கொண்டு காண்பதென்னே.
6
தெரித்த கணையாற் திரிபுர
    மூன்றுஞ்செந் தீயின்முழ்க
எரித்த இறைவன் இமையவர்
    கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே.
7
சுற்ற மமரர் சுதபதி
    நின்திருப் பாதமல்லால்
பற்றொன் றிலோமென் றழைப்பப்
    பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கனங்கனைத் தீவிழித்
    தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே.
8
சித்தத் தெழுந்த செழுங்கம
    லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற
    தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந்
    தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு
    மற்றினிக் காண்பதென்னே.
9
தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
    யுன்னித் தடவரையை
வரைக்கை களாலெடுத் தார்ப்ப
    மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்
    அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட
    கண்கொண்டு காண்பதென்னே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.81 கோயில் (சிதம்பரம்) - திருவிருத்தம்
கருநட்ட கண்டனை அண்டத்
    தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல்
    லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்
    கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர்
    கோனென்று வாழ்த்துவனே.
1
ஒன்றி யிருந்து நினைமின்கள்
    உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற்
    கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயெனும் எம்பெரு
    மான்றன் திருக்குறிப்பே.
2
கன்மன வீர்கழி யுங்கருத்
    தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது
    போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன்
    போந்த சுவடில்லையே.
3
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
    வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
    மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்
    பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
    இந்த மாநிலத்தே.
4
வாய்த்தது நந்தமக் கீதோர்
    பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள்
    செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத்
    தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன்
    றோநந்தங் கூழைமையே.
5
பூத்தன பொற்சடை பொன்போல்
    மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன
    பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள்
    பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள
    ரோவென்றன் கோல்வளைக்கே.
6
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
    நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்தவெண்
    ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
    தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக்
    கூத்தன் குரைகழலே.
7
படைக்கல மாகவுன் னாமத்
    தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப்
    பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது
    வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்
    சிற்றம் பலத்தரனே.
8
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
    றணிந்து புரிசடைகள்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந்
    துழலும் விடங்கவேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
    தாலிவ் விருநிலமே.
9
சாட எடுத்தது தக்கன்றன்
    வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை
    நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட்
    சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்
    றோநம்மை யாட்கொண்டதே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com